அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கரில் பாட்டு கேட்கத் தடை!

New Project

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் ஸ்பீக்கரைப் பயன்படுத்தி உரத்த சத்தத்தில் பாடல்கள் மற்றும் வீடியோக்களைக் கேட்பதற்குப் போக்குவரத்துத் துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் சக பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், இது தொடர்பாகப் பல்வேறு புதிய வழிகாட்டுதல்களையும் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

புதிய உத்தரவின்படி, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் செல்போன்களில் பாடல்கள், வீடியோக்கள் அல்லது ரீல்ஸ்களைப் பார்க்கும்போது கட்டாயமாக ஹெட்போன்களை (Headphones) மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செல்போன் ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்றும், இதனை மீறும் பயணிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் நிலவும் அதிகப்படியான சத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் நிம்மதியான பயணத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இது குறித்துக் கடந்த 17-ஆம் தேதி “பேருந்துகளிலும் ‘சைலன்ட் பயணம்’ விதி வருமா?” என்ற தலைப்பில் செய்திக்கதிர் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தச் செய்திக்குக் கிடைத்த பலனாகத் தற்போது அரசு இத்தகைய சிறப்பான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *