பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் ராஜா!

New Project (54)

வறுமைக்கும் குடும்பச் சூழலுக்கும் இடையே போராடி, தனது அபார திறமையால் சர்வதேச விளையாட்டரங்கில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளியாகவும், தாய் தீப்பெட்டித் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வருகின்றனர். ஆரம்பத்தில் கபடி விளையாட்டில் ஈடுபாடு காட்டி வந்த ராஜா, பின்னர் தனது திறமையை உணர்ந்து பளுதூக்குதல் (Weightlifting) விளையாட்டுக்கு மாறினார். வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த போதிலும், விளையாட்டு மீதான அவரது ஆர்வம் குறையவில்லை.

அவரது திறமையைக் கண்டு ‘சாய்’ (SAI – Sports Authority of India) விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ராஜா, விளையாட்டுத் திறமையால் இந்திய ரயில்வேயிலும் வேலை வாய்ப்பைப் பெற்றார்.

இந்நிலையில், கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 65 கிலோ பிரிவில் பங்கேற்ற ராஜா, சர்வதேச வீரர்களுக்குக் கடும் சவால் அளித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சுமைதூக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, அனைத்துத் தடைகளையும் தாண்டி சர்வதேச அரங்கில் பதக்கம் வென்றுள்ள ராஜாவிற்கு விளையாட்டு ரசிகர்களும், பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *