தமிழக அரசின் வருவாயைப் பெருக்க குழு!

தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக, பொருளாதார நிபுணரும் மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களை அதிகரித்தல், வரி ஏய்ப்புகள் மற்றும் வருவாய் கசிவுகளைத் தடுத்தல், நிர்வாகச் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய வருவாய் வாய்ப்புகளைக் கண்டறிந்து நிதித் தற்சார்பை அடைவதற்கான ஆலோசனைகளையும் இக்குழு வழங்கவுள்ளது.
இக்குழுவில் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜிப் ஷா, எம்.ஏ. சித்திக் மற்றும் எம். சுரேஷ் பாபு ஆகிய பொருளாதார மற்றும் வரித்துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு அடுத்த 3 மாதங்களுக்குள் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டு, மாநில அரசின் வருவாயை உயர்த்துவதற்கான முக்கியப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
