கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால செங்கல் கட்டுமானம்!

திருச்சி மாவட்டம் கூகூர் கிராமத்தை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில், சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான சுட்ட செங்கற்களால் ஆன கட்டட எச்சங்களும், பிரம்மாண்ட கல் தூண்களும் கண்டெடுக்கப்பட்டு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆற்றுப் படுகையில் தென்படும் இந்த அமைப்பில், இரண்டு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் களிமண் பூச்சுக் கொண்டு மிக உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளன. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சாதாரண செங்கற்களை விட சுமார் ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் இந்தச் செங்கற்களில், பழங்காலத் தமிழர்களின் ‘ய’ வடிவக் குறியீடுகளும் தெளிவாகக் காணப்படுகின்றன.
கட்டடச் சுவர்களுடன் இணைந்து பழங்காலக் கல் தூண்கள், தடிமனான கருப்பு நிறப் பாறைகள், பழங்காலக் கூரை ஓடுகள் மற்றும் மண்பாண்ட எச்சங்கள் ஆகியவை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. பெருமைமிக்க கரிகால சோழன் கல்லணையைக் கட்டிய காலத்தில், அதனுடன் தொடர்புடைய நீர் மேலாண்மை அமைப்பாகவோ, முக்கியமான படகுத் துறையாகவோ, வழிபாட்டுத் தலமாகவோ அல்லது படைவீரர்கள் தங்குவதற்கான முகாமாகவோ இது இருந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். தற்போது இந்த இடத்தை வருவாய்த் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ள நிலையில், தொல்லியல் துறை மூலமாக விரிவான அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
