தாண்டிக்குடியில் கிடைத்த 2,500 ஆண்டுகள் பழமையான பொருட்கள்!

New Project (77)

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள காமனூர் கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு வட்டம் சார்பில் நடத்தப்பட்ட அகழாய்வில், 2,500 ஆண்டுகள் பழமையான ஈமச்சடங்கு முறை மற்றும் அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமனூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட கல்பதுகை புதைகுழி வளாகத்தில், 10-க்கு 10 மீட்டர் பரப்பளவில் சுமார் 1 மீட்டர் ஆழத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வில், மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு பண்டைய ஈமச்சடங்கு அமைப்பு வெளிப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 2 இணையான வரிசைகளில் மொத்தம் 7 புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து மைசூர் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் ஆர்.என். குமரன் தெரிவிக்கையில், இந்தப் புதைகுழி வளாகம் கிழக்கு நோக்கிய செவ்வக வடிவ உலர் கல்லடுக்குச் சுவரால் சூழப்பட்டுள்ளது என்றும், கற்களின் நிலைத்தன்மைக்காகச் சிறிய கற்கள் மற்றும் பானையோட்டுக் கலவைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.

இந்த அகழாய்வின் போது இரும்புக் கத்திகள், உளிகள், அம்பு முனைகள், வாள்கள், தூது பவளம், படிகக் கல் மணிகள், பதக்கங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தோ-பசிபிக் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், குறியீடுகள் பொறிக்கப்பட்ட சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு-கருப்பு கலந்த மண் பாண்டங்களும் சிக்கியுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் வாழ்ந்த பழந்தமிழர்களின் தொழில் நுட்பம், சமூக வாழ்க்கை மற்றும் ஈமச்சடங்கு முறைகள் குறித்த முக்கிய வரலாற்றுச் சான்றுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *