மதுரையில் 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்!

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மொட்டமலையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் டி. முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் நடத்திய மேற்பரப்பு ஆய்வில், சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலப் பாறை ஓவியங்கள் மற்றும் இரும்பு உருக்காலைச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
‘உமை பொந்து’ என்று அழைக்கப்படும் இயற்கை குகையின் உட்புறச் சுவர்களில் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்தால் தீட்டப்பட்ட நடனமாடும் மனித உருவங்கள், ஊர்வன மற்றும் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அப்பகுதியில் இரும்புத் தாதுக் கழிவுகள் மற்றும் உலைகளுக்குக் காற்றைச் செலுத்தப் பயன்பட்ட சுடுமண் குழாய்களின் உடைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழில்நுட்பம் பெற்றிருந்தது உறுதியாகியுள்ளது.
இந்த ஓவியங்கள் கி.மு. 3000 அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என கலை வரலாற்று ஆய்வாளர் காந்தீரஜன் தெரிவித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம் பண்டைய தமிழ்நாடு – கேரளா இடையேயான வணிகப் பாதைகளை வெளிக்கொணர முடியும் என தொல்லியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
