அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி?

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவாகச் சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது போல, தற்கால மாணவர்களின் ஊட்டச்சத்தையும் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு இந்த எண்ணம் எழுந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யிடம் நேரடியாக முன்வைத்துள்ளேன்” என்று கூறினார்.
மேலும், இத்திட்டம் பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி நிதி மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகள் சம்பந்தப்பட்டது என்பதால், இது குறித்து உரிய முறையில் பரிசீலிப்பதாக முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அமலுக்கு வரும்பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
