சென்னை மெட்ரோவில் பயணித்து முதலமைச்சர் விஜய் அதிரடி ஆய்வு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடு மற்றும் பயணிகளுக்கான வசதிகளை நேரில் பார்வையிடும் வகையில், முதலமைச்சர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நேரில் சென்ற அவர், சாதாரணப் பயணியைப் போலத் தானியங்கி முறையில் பயணச் சீட்டு (Ticket) பெற்று மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
ஓமந்தூரார் தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர், மெட்ரோ ரயிலில் பயணித்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தைச் சென்றடைந்தார். பயணத்தின் போது ரயிலில் இருந்த பயணிகளிடம் மெட்ரோ சேவைகள் மற்றும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். முதலமைச்சரை ரயிலில் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்து அவருடன் உரையாடினர்.
தொடர்ந்து நந்தனம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கு அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகளின் முன்னேற்றம், புதிய பாதைகளின் திட்டமிடல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
