ஆகஸ்ட் 11-ல் TNPSC குரூப் 2 அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்பப்படும் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ (Group 2 & Group 2A) பணியிடங்களுக்கானத் தேர்வுகளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கும் அரசு வேலை வேட்பாளர்களுக்கு மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. தேர்வாணையம் ஏற்கனவே வெளியிட்டிருந்த வருடாந்திரத் தேர்வு கால அட்டவணையின்படி (Annual Planner), குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் திரு. எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை, என்னென்ன பதவிகள் நிரப்பப்பட உள்ளன, கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளிட்ட அனைத்து விரிவான தகவல்களும் இடம்பெறும். பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இம்முறை கணிசமான எண்ணிக்கையில் பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு அறிவிப்பு வெளியான அன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தொடங்கப்படும். எனவே, அரசுப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்காமல், தங்களது பாடத்திட்டப் பயிற்சிகளையும் மாதிரித் தேர்வுகளையும் இப்போதிருந்தே தீவிரப்படுத்த வேண்டும் என்று போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
