MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று மதியம் 3 மணி வரை மட்டுமே அவகாசம்!

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்று மதியம் 3.00 மணியுடன் நிறைவடைகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் கடைசி நிமிடப் பதற்றத்தைத் தவிர்த்து, விரைவாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.
மாணவர்கள் மருத்துவச் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களில் எவ்விதத் திருத்தங்களோ அல்லது மாற்றங்களோ செய்ய முடியாது என்பதால், மாணவர்கள் தங்களது விவரங்களை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறு இயக்ககம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை மொத்தம் 70,485 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதியம் 3 மணியுடன் விண்ணப்பப் பதிவு முழுமையாக நிறைவடையும் நிலையில், அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவிலேயே தரவரிசைப் பட்டியல் (Rank List) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
