2036-ல் பணத்திற்கு வேலையே இருக்காது: எலான் மஸ்க் கணிப்பு!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளின் அதிவேக வளர்ச்சி எதிர்கால மனித சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பையே முற்றிலும் மாற்றியமைக்கும் என உலகப் பணக்காரரும் முன்னணித் தொழிலதிபருமான எலான் மஸ்க் கணித்துள்ளார். வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் ‘பணம்’ என்ற அமைப்பிற்கான தேவையே இல்லாமல் போய்விடும் என அவர் தெரிவித்துள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் ரோபோக்களும் மனிதர்களை விட அதிக அளவிலான பொருட்களையும் சேவைகளையும் மிக விரைவாக உருவாக்கும் திறன் பெறவுள்ளன. இதன் காரணமாக உலகில் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், எந்தவொரு அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லாத ‘பற்றாக்குறையற்ற சூழல்’ (Post-Scarcity Economy) உருவாகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகள் அனைவருக்கும் தடையின்றி எளிதாகக் கிடைக்கும் நிலை உருவாகும்போது, அதைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் பணத்தின் அவசியமும் மதிப்பும் இயல்பாகவே குறைந்துவிடும் என்று எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் இந்த அசுர வளர்ச்சி மனித குலத்தின் அன்றாட வாழ்க்கை முறையையும் பொருளாதாரத்தையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
