குஷா’ ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பில் சாதனை!

இந்திய பாதுகாப்புத் துறையைத் தற்சார்பு கொண்டதாக மாற்றுவதிலும், வெளிநாட்டு ஆயுத இறக்குமதிச் சார்பைக் கணிசமாகக் குறைப்பதிலும் மிக முக்கியமான வரலாற்றுச் சாதனை ஒன்று எட்டப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ள ‘குஷா’ (Project Kusha) என்ற நீண்டதூர தரைவழி-வான் ஏவுகணை அமைப்பின் (Long-Range Surface-to-Air Missile) முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
எதிரிகளின் போர் விமானங்கள், ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை மிக நீண்ட தூரத்திலேயே கண்டறிந்து காற்றில் வைத்தே துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டதாக இந்த ‘குஷா’ ஏவுகணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரஷ்யாவின் எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு அமைப்பிற்குப் போட்டியாக, அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய பொறியாளர்களால் இது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முதல் சோதனை வெற்றி மூலம் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ராணுவ வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தொழில்நட்பத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைத் திட்டம், இந்திய எல்லைகளின் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதோடு, எதிர்கால ராணுவத் தேவைகளுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்புகளுக்கும் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
