அட இது புதுசா இருக்கே… தக்காளி விலை பற்றி இனி கவலை வேண்டாம்!

tomato 1200

பொதுவாக காய்கறிகள் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை தான் திடீர் திடீரென உச்சத்துக்குச் சென்று இல்லத்தரசிகளுக்குப் பீதியை ஏற்படுத்திவிடும்.

சமீபத்தில் கூட விளைச்சல் குறைவு மற்றும் புரட்டாசி மாதத்தினால் அதிகரித்த தேவை உள்ளிட்ட காரணங்களால், தக்காளி விலை சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவே சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 80 முதல் 110 ரூபாய் வரை விற்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தான் தக்காளியின் விலை குறைந்து, சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்கப்படுகிறது.

இதுபோன்று தக்காளி விலை திடீர் திடீரென்று அதிகரிக்கும் சூழ்நிலையில், அதை சமாளிக்கும் வகையில் தக்காளி கூழில் இருந்து தயாரிக்கப்பட்ட தக்காளி தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் சங்கீதா அறிமுகப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அந்த கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில், தக்காளி விலை வீழ்ச்சியடையும் காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க, தக்காளியில் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த தக்காளி தாளை தயாரித்துள்ள பேராசிரியர் சங்கீதா கூறுகையில், “உணவிற்கு பொதுவாக தக்காளி தான் பயன்படுத்தப்படும். ஆனால் தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளான தக்காளி தாள்களையும் இனி பயன்படுத்தலாம்.

விலை குறைவாக தக்காளி விற்கும் நாள்களில், அவற்றை சேகரித்து சுத்தம் செய்து தோல்கள், விதைகளை நீக்கி, கூழாக்கி மென்மையாக அரைத்து சீராகப் பரப்பி, உலர்த்தி தரமான தக்காளி தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் துண்டுகளாக்கி சமையலுக்குப் பயன்படுத்தலாம். இதில் இயற்கை ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளதால் உடலுக்கு நல்லது. இதன் தரம், சுவை, சத்துகள் குறையாது. இந்தத் தக்காளி தாள்களை தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன நிபுணா்கள் ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கியுள்ளனா்.

இந்தத் தக்காளி தாள்களை சாதாரணமாக காற்றுப்புகாத பைகளில் 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். அதற்கும் மேல் பயன்படுத்துவதாக இருந்தால் குளிா்ச்சாதன பெட்டிகளில் வைத்துப் பாதுகாத்து பயன்படுத்தலாம். இப்போது ஆய்வகத்தில் வைத்துத் தயாரிக்கப்படும் இந்த தக்காளி தாள்களை, விவசாயிகள் தங்களது வீட்டில் வைத்து எளிமையாக தயாரிக்கும் அளவுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது சாத்தியமாகும் நிலையில், தக்காளி பயிரிடும் விவசாயிகள் தக்காளி விலை குறையும் சமயத்தில் தங்களது வீடுகளிலேயே தக்காளித் தாள்கள் தயாரித்து விற்றுப் பயனடையலாம்.

சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகள் தக்காளியை அதிகம் உணவில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த தக்காளி தாள்களில் தக்காளி விதைகளை முழுவதுமாக நீக்கப்பட்டதால் டயாலிசிஸ் செய்து கொள்பவர்களும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும் இதனை பயன்படுத்தலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

绿茶. Ip cam nvr 系統設定服務. tech news today.