இஸ்ரோவின் புதிய தலைவராகும் நாராயணன்… டிப்ளமோ இன்ஜினீயர் டு விஞ்ஞானி!

ISRO 1200

ஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organization – ISRO) அடுத்த தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விண்வெளித்துறையில் ஏறக்குறைய 40 வருட அனுபவத்தைக் கொண்டவர் மற்றும் இந்திய விண்வெளி அமைப்பில் பல முக்கிய பங்குகளை வகித்துள்ளார்.

தற்போது இந்த பதவியில் இருக்கும் எஸ்.சோமநாத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை முன்னிட்டு, இஸ்ரோ தலைவர் பொறுப்புக்கு வி. நாராயணன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் வரும் ஜனவரி 14 முதல் 2 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ இன்ஜினீயர் டு விஞ்ஞானி

இஸ்ரோவின் 11 ஆவது தலைவராக பதவியேற்க உள்ள வி.நாராயணன், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள மேலக்காட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரில் முடித்தார். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் (DME) முதல் ரேங்க் பெற்றார்.

பிறகு, தனியார் துறையில் பணியாற்றத் தொடங்கினார். திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் TI டயமண்ட் செயின் லிமிடெட், மெட்ராஸ் ரப்பர் பேக்டரி மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) உள்ளிட்ட நிறுவனங்களில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பணியாற்றினார். AMIE படிப்பை முடித்து, 1989 ஆம் ஆண்டு கார்க்பூர் ஐஐடி-யில் எம்.டெக் கிரையோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.

1984 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) சேர்ந்த பிறகு, திரவ உந்து அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜனவரி 2018 வரை அவர் பல பதவிகளில் பணியாற்றினார். அவர் தனது இஸ்ரோ வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஆக்மென்டட் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (ஏஎஸ்எல்வி) மற்றும் ரோகினி சவுண்டிங் ராக்கெட்டுகளுக்கான சாலிட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் உருவாக்க உதவினார்.

விண்வெளித்துறையில் பல சாதனைகளைப் புரிந்து வரும் இஸ்ரோவில், தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருவது அவர்களுக்கு வழங்கப்படும் பதவியில் இருந்து உறுதி செய்யப்படுகிறது. இஸ்ரோவின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன் நாயர், கே.சிவன் ஆகியோர் ஏற்கெனவே பதவி வகித்து இருந்தனர். அதன் பின்னர் தற்போது இஸ்ரோவின் தலைவராக மேலும் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

40 ஆண்டுக் கால அனுபவம்

1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த நாராயணன் அங்கு பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கெட் மற்றும் விண்கலம் ஏவுதல் தொடர்பான பிரிவில் பணியாற்றி வந்த நாராயணன், படிப்படியாக திறன் அடிப்படையில் சந்திராயன், ககன்யான் உட்பட பல்வேறு செயல் திட்டங்களுக்கு தனது பங்களிப்பையும் வழங்கி இருக்கிறார். GSLV Mk Ill C25 (Cryogenic Project) திட்டத்தின் திட்ட இயக்குநராக செயல்பட்டார். ஜிஎஸ்எல்வி Mk III வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) உள்ள சாலிட் ப்ராபல்ஷன் பகுதியில் சவுண்டிங் ராக்கெட்டுகள் மற்றும் ஆக்மென்டட் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (ASLV) மற்றும் போலார் சாட்டிலைட் ஏவுகணை வாகனம் (PSLV) ஆகியவற்றில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார்.

முதலமைச்சர் வாழ்த்து

“இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. வி.நாராயணன் அவர்களின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

绿茶. wi fi 全覆蓋. Top 10 smartphones under ₹20,000 : best value for your money !.