ஜூலை 31 முதல் கறிக் கோழி கடைகள் அடைப்பு!

தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் கறிக் கோழி (பிராய்லர் கோழி) விற்பனையை முற்றிலுமாக நிறுத்துவதாகத் தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற இக்கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், கறிக் கோழி உற்பத்தியாளர்களின் முறையற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோழி உற்பத்தியாளர்கள், விற்பனைக்காகக் கோழிகளை அனுப்பும்போது அவற்றின் கழுத்து வரை அதிகப்படியான தீவனத்தைக் கொடுத்து அனுப்புவதாக வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், இறைச்சிக்காகக் கோழிகளை வெட்டும்போது அவற்றின் கழிவுகள் இறைச்சியிலேயே கலந்து, உணவின் தரத்தையும் சுகாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் நிலை உருவாகிறது. மேலும், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள தீவனக் கட்டுப்பாட்டு விதிகளையும் உற்பத்தியாளர்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் உணவகங்களும், அசைவப் பிரியர்களான பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்துள்ளதாகவும், உற்பத்தியாளர்களின் இந்த முறைகேட்டைத் தடுக்க வேறு வழி இல்லாததாலேயே இந்த முடிவை எடுக்க நேரிட்டதாகவும் கூறி வணிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஜூலை 31 முதல் தொடங்கவுள்ள இந்த முடிவால் மாநிலம் முழுவதும் கோழி இறைச்சி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
