விண்வெளித் துறையில் உலகை ஆளப்போகும் தமிழ்நாடு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் மாநிலத்தின் தொழில்துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பிரம்மாண்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் ‘விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளன.
குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ள இந்த மண்டலம், தென் மாவட்டங்களில் பெருமளவிலான புதிய முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இதனுடன், வரும் 2036-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மொத்த உற்பத்தியை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, புதிய ‘தமிழ்நாடு தொழில் கொள்கை’ மற்றும் ‘தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் 3.0’ ஆகியவை அமல்படுத்தப்பட உள்ளன.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த, சிப்காட் சார்பில் அடுத்த 5 ஆண்டுகளில் ₹3,200 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் டெக் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்தியாவின் முதல் AI நகரமாக ‘அறிவகம்’ அமைக்கப்படவுள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்காக இப்பட்டஜெட்டில் மொத்தமாக ₹4,414 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
