தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் வீட்டு வசதி நிலை குறித்த ஆய்வுப் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை ஒரு மாதம் முழுவதும் இந்த மெகா கணக்கெடுப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெறவுள்ளன.
இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாக இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.15 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்களும், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்களும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாள் படிவங்களுக்குப் பதிலாக, பிரத்யேக மொபைல் செயலி (Mobile App) மூலம் நேரடியாகத் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த முதற்கட்ட ஆய்வில் வீடுகளின் நிலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி மற்றும் வாகன உடைமை உள்ளிட்ட 33 முக்கியக் கேள்விகள் கேட்கப்பட்டுப் பதில்கள் பதிவேற்றப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் அரசு அலுவலர்களுக்குத் துல்லியமான தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், 1948-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
