தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4.23 லட்சத்தைக் கடந்து சாதனை!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இதுவரை இல்லாத அளவாக 4 லட்சத்தைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, ஜூலை 28-ஆம் தேதி வரை மொத்தம் 4,23,955 மாணவர்கள் புதியதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டின் இதே காலகட்டத்தில் மாணவர் சேர்க்கை 4,00,364-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 23,591 மாணவர்கள் கூடுதலாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் 41,231 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2,94,209 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மேலும் 2 முதல் 8-ஆம் வகுப்புகளில் 88,515 மாணவர்கள் இணைந்துள்ளனர்.
காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள், இலவசச் சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்ற அரசின் நலத்திட்டங்களே இந்த அதிகப்படியான சேர்க்கைக்கு முக்கியக் காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேர்க்கைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
