சென்னையில் ஜூலை 25, 26-ல் ரஷ்யக் கல்விக் கண்காட்சி!

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்பெறும் வகையில், சென்னை ‘ரஷ்யன் ஹவுஸ்’ சார்பில் 2-வது அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி வரும் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி நேரடியாக நடைபெற உள்ளது.
இந்தக் கல்விக் கண்காட்சியின் மூலம் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ரஷ்யாவின் முன்னணி அரசு, மாநில மற்றும் கூட்டாட்சிப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளை நேரடியாகச் சந்தித்து எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிற உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை தகவல்களைப் பெறுவதோடு, உடனடி ‘ஸ்பாட் அட்மிஷன்’ (Spot Admission) பெறும் அரிய வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ள வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கான புதிய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் முக்கிய வெளிநாடாக ரஷ்யா திகழ்கிறது. இதனால், குறைந்த செலவில் தரமான மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக ரஷ்யா உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்காக 5,000 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், மாணவர்களின் கூடுதல் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சுமார் 8,000 எம்பிபிஎஸ் இடங்கள் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என ரஷ்யன் ஹவுஸ் அமைப்பினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
