6-8 வகுப்புகளுக்கும் இனி காலை உணவு: காமராஜர் பெயர் சூட்டி தவெக அரசு அதிரடி!

தமிழகப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யவும், பசியின்றி அவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்டத்தில், தவெக அரசு தற்போது அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இத்திட்டம், இனி “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகத் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவைப் போற்றும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களின் இடைநிற்றலைத் தடுத்து அவர்களைப் பள்ளியை நோக்கி ஈர்த்த அவரது தொண்டை கௌரவிக்கும் வகையிலும் இத்திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்ற அறிவிப்புடன் சேர்த்து, மாணவர்களுக்கான மற்றொரு மிகப்பெரிய நற்செய்தியையும் அரசு தனது அரசாணையில் வெளியிட்டுள்ளது.
இதுவரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) மட்டுமே வழங்கப்பட்டு வந்த இக்காலை உணவுத் திட்டமானது, இனிமேல் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசின் இந்த அதிரடி விரிவாக்க நடவடிக்கை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மேலும் பல லட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் தினமும் பயன்டைவார்கள். பள்ளி மாணவர்களின் நலன் கருதி தவெக அரசு எடுத்துள்ள இந்த முடிவிற்கு ஆசிரியர் அமைப்புகளும், பெற்றோர்களும் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
