ஆப்பிரிக்காவின் உயரமான சிகரம் ஏறி 8 வயது சிறுமி இயா கிரிஷ் சாதனை!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி இயா கிரிஷ் (Iya Krish), ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ‘மவுண்ட் டவ்ப்கல்’ (Mount Toubkal) மீது ஏறி சாதனை படைத்து அகில உலகளவில் புகழடைந்துள்ளார். மொராக்கோ நாட்டில் அட்லஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான சிகரம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,167 மீட்டர் (13,671 அடிகள்) அசுர உயரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய வயதிலேயே மலையேற்றத்தில் அசாத்திய ஆர்வம் கொண்ட சிறுமி இயா கிரிஷ், தனது தந்தை கிருஷ்ணராஜுடன் இணைந்து இந்தத் துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கரடுமுரடான அட்லஸ் மலைத்தொடர் வழியாகச் சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தைக் கடுமையான வானிலைக்கு இடையே கடந்து, கடந்த ஜூலை 7ஆம் தேதி சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக எட்டியுள்ளனர்.
கடுமையான பனிப் பொழிவு மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவைக் கடந்து, வெறும் 3 நாட்களில் இந்த இமாலய இலக்கை அடைந்து சாதனையைப் பதிவு செய்துள்ளார். 8 வயதே ஆன சிறுமி இயா கிரிஷின் இந்த அசாத்தியமான மலையேற்ற சாதனையையும், அவரது மன உறுதியையும் கண்ட சர்வதேச மலையேற்ற வீரர்கள் மற்றும் பல்வேறு துறைப் பிரபலங்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
