தீவிர புயலாக வலுப்பெற்ற ‘மோன்தா’

New Project (2)

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் நிலை:
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான மோன்தா புயல், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. இன்று (அக். 28) அதிகாலை 5.30 மணிக்கு, அது ஆந்திராவின் மச்சிலிபட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிமீ மற்றும் விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 340 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்காக நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே, மச்சிலிப்பட்டணம் மற்றும் கலிங்கபட்டணம் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது காற்று மணிக்கு 90–100 கிமீ வேகத்தில் வீசலாம்; சில நேரங்களில் அது 110 கிமீ வரை அதிகரிக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் மழை:
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிகக் கனமழை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, தேனி, கன்னியாகுமரியில் கனமழை பெய்யும். பிற இடங்களில் லேசான முதல் மிதமான மழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மோன்தா புயலின் தாக்கத்தால் கடல் சீற்றமாக இருப்பதால், அக். 29 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45–65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *