தமிழக கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம்… வழிவகுத்த வளர்ச்சித் திட்டங்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது கிராமப்புற முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி, சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தினார். இன்று அவரே முதலமைச்சராக வீற்றிருக்கும் நிலையில், கிராமங்களின் வளர்ச்சிக்காக மேலும் பல சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
ஊராட்சி நிர்வாகம்
அந்த வகையில், கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள் பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் (UPS) சாதனம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான Vptax Portal நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 இலட்சம் என்பது ரூ.5 இலட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் என்பது ரூ.25 இலட்சமாகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ20 இலட்சம் என்பது ரூ.50 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மீண்டும் உத்தமர் காந்தி விருது
முதலமைச்சர் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, மாநிலத்தில் சிறப்பாகச் செயல்புரியும் கிராம ஊராட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்கும் பொருட்டு ‘உத்தமர் காந்தி விருது’ வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இடையில் அந்த விருது திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நிறுவப்பட்டு, சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சத்திற்கான ஊக்கத் தொகையுடன், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
கிராமப்புற பயனளிக்கும் இத்திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில் பெண்கள் 86.16 சதவீதமும், மாற்றுத் திறனாளிகள் 2,87,461 பேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதமும் பயன் பெற்றுள்ளனர்.

ஊரகச் சாலைகள் மேம்பாடுத் திட்டம்
தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,208.88 கி.மீ. நீளமுள்ள 4,606 சாலைப் பணிகள் ரூ.1,884.03 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு உள்ளன.
ஊரக வீடு வழங்கும் திட்டங்கள் (Rural Housing)
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 2016-17 முதல் 2019-20 வரையிலும் திராவிட மாடல் ஆட்சிக்காலமான 2021-22 ஆம் ஆண்டுகளிலும் மொத்தமாக 7,50,405 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டம்
நமக்கு நாமே திட்டத்தின் மூன்று ஆண்டுகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பயன்பாட்டிற்காக 631 கட்டடங்களும், 73 கட்டடங்களும், பொதுமக்கள் பயன்படுத்த பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம், கதிரடிக்கும் களம் உட்பட 5,377 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
சிறப்பு சுய உதவிக் குழுக்கள்

சமூக பொருளாதார விளிம்பு நிலையில் வாழ்வோரைக் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த, இதுவரை 37,163 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் இத்திட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் என இதன் மூலம் 3 இலட்சத்து 76, 559 பேர் பயனடைந்துள்ளனர்.
சுய வேலை வாய்ப்புத் திட்டம் தனிநபர் தொழில் முனைவு (SEP-I)
சுய வேலை வாய்ப்பு தனிநபர் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 21,190 தனி நபர்களுக்கு ரூபாய் 117.00 கோடியும், 12,503 குழுக்களுக்கு ரூபாய் 428.82 கோடியும் வட்டி மான்யத்துடன் கூடிய வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் பணியமர்வு (EST&P)
45,150 நகர்ப்புர ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ரூபாய் 89.30 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 511 வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர் திறன் விழாக்கள் ரூ.4.01 கோடி செலவில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு 92,003 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
ஜல் ஜீவன் திட்டம்

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளில் கிராமப் புறங்களின் 63,63,379 வீடுகளுக்கு ரூ.2,010,29 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிர, சாதிவேறுபாடுகளை நீக்க கிராமப்புறங்களிலும் எரிவாயு தகன மேடை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்புத் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் திட்டம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த பல திட்டங்களால் தமிழக கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
