தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்… யாருக்கு எந்த இலாகா?

Duraimurugan - Regupathi

மிழக அரசின் அமைச்சரவையில் மீண்டும் ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், கடந்த ஏப்ரலுக்குப் பிறகு நடைபெற்ற மற்றொரு முக்கிய அமைச்சரவை மாற்றமாகும்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், அமைச்சர்களின் இலாகா மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன், ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கூடுதலாக சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரிடமிருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரகுபதி, இதுவரை சட்டத்துறையை கவனித்து வந்த நிலையில் தற்போது கனிமவளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கனிமவளத்துறை, தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாகும்.

ஏப்ரலில் நடந்த அமைச்சரவை மாற்றம்

கடந்த ஏப்ரல் 27 அன்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே.பொன்முடி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மின்சாரத் துறையையும், வீட்டு வசதி அமைச்சர் எஸ்.முத்துசாமி மதுவிலக்கு மற்றும் கலால் துறையையும் கூடுதலாக கவனிக்க நியமிக்கப்பட்டனர்.

மேலும், பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு, வனத்துறை மற்றும் கதர் துறை ஒதுக்கப்பட்டன. இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டு, பால்வளத்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.

தற்போதைய அமைச்சரவை மாற்றம், திமுக அரசின் நிர்வாகத் திறனை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மக்கள் நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

白茶. ip cam 解決方案. tech news today.