புதுக்கோட்டையில் 510 பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சேரனூரில் கண்மாய் பணியின் போது 510 பழங்கால நாணயங்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது உள்ளூர் மக்களிடையேயும் தொல்லியல் ஆர்வலர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேரனூர் சேரனிக்கண்மாய் அருகே விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பணியாளர்கள் வழக்கம்போல மண் வெட்டிக்கொண்டிருந்தபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த பழங்கால நாணயங்கள் தென்பட்டுள்ளன. உடனடியாக அவற்றைச் சேகரித்துப் பார்த்தபோது, அவற்றில் சுவாமி மற்றும் பாம்பு உருவங்கள் பொறிக்கப்பட்ட 510 பழங்கால நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த ஊராட்சி செயலர் முருகவேல், சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணியை வரவழைத்தார். அவர் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அந்த நாணயங்கள் அனைத்தும் பணியாளர்கள் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அவர் பொன்னமராவதி வட்டாட்சியர் ச.பழனிசாமியிடம் நாணயங்களை ஒப்படைத்தார்.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த நாணயங்கள் பழங்காலச் செப்புக்காசுகள் மற்றும் உலோக நாணயங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொல்லியல் துறையினர் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் எந்த மன்னர் ஆட்சிக் காலத்தில் புழக்கத்தில் இருந்தவை என்ற முழுமையான விவரங்கள் தெரியவரும்.
