ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப் வென்ற தமிழ்நாட்டு மாணவர்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பிற்குப் பிறகு இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இலாங்கோ முற்றிலும் வித்தியாசமான ஒரு கல்விப் பாதையைத் தேர்ந்தெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஐவி லீக் (Ivy League) கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) இளங்கலைப் படிப்பு படிக்க பிரணவ் இலாங்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது 4 ஆண்டு காலப் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்கும் வகையில் ரூ.3.55 கோடி முழு கல்வி உதவித் தொகையை (Full Scholarship) அவர் வென்றுள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதம் (Applied Mathematics) மற்றும் பொது சுகாதாரம் (Public Health) ஆகிய இரண்டு முக்கிய துறைகளை இணைத்து படிக்கத் திட்டமிட்டுள்ள பிரணவ், ஆகஸ்ட் மாத இறுதியில் தனது கல்லூரிப் படிப்பைத் தொடங்கவுள்ளார். சர்வதேச அளவில் கடுமையான போட்டிகளுக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமப்புற சூழல் பின்னணி கொண்ட மாணவர் இவ்வளவு பெரிய தொகையை ஸ்காலர்ஷிப்பாக வென்றிருப்பது இந்திய மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
