சென்னை அருகே உலகத் தரத்தில் பிரம்மாண்ட ‘ஏ.ஐ. நகரம்’!

உலகத்தர ஆராய்ச்சி மையங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் தொழில்துறை வளாகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ‘ஏ.ஐ. நகரம்’ (AI City) சென்னைக்கு அருகே அமைக்கப்படும் எனத் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) சார்பில் ‘டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் அண்டு டிரான்ஸ்ஃபர்மேஷன்’ என்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்கள் வெறும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமின்றி, அதனை உருவாக்குபவர்களாகவும் வடிவமைப்பாளர்களாகவும் உருவெடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்பக் கல்வி அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் தற்போது 8 மாவட்டங்கள் ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருவதாகவும், இதனை 16 மாவட்டங்களாக விரிவுபடுத்துவதே அரசின் முதன்மை இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும் என்றும், சென்னை அருகே அமையவுள்ள புதிய ஏ.ஐ. நகரம் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் மையமாகத் திகழும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
