12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!

New Project (60)

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்குப் பெருமை சேர்க்கும் அரிதான நீலக்குறிஞ்சி மலர்கள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பூத்துக் குலுங்குவதால், மலைப்பகுதிகள் அனைத்தும் நீல நிறக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன.கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓ-வேலி, நாடுகாணி, புளியம்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகப் பாறைகளிலும் சரிவுகளிலும் குறிஞ்சி மலர்கள் அடர்த்தியாகப் பூத்து வருகின்றன. இந்த அரிய நிகழ்வைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடலூருக்குப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக நாடுகாணி தாவரவியல் பூங்கா மற்றும் ஊசிமலை காட்சி முனை (Oosimalai View Point) ஆகிய இடங்களில் பயணிகள் கூடி, நீல நிறக் பின்னணியில் புகைப்படங்கள் மற்றும் செல்பிக்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதேவேளையில், மலர்கள் பூத்துள்ள பெரும்பாலான பகுதிகள் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் உலவும் அடர்ந்த வனப்பகுதிகள் என்பதால், வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தடையை மீறி ஆபத்தான வனப்பகுதிக்குள் நுழைவது, வனவிலங்குகளின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதோடு யானை தாக்குதல் போன்ற ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரிய வகை குறிஞ்சி மலர்களைப் பறித்துச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இயற்கை எழிலை அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே ரசித்துச் செல்ல வேண்டும் என்றும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *