இந்தியாவில் விரைவில் ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள்!

New Project (56)

இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கவும் கள சோதனை அடிப்படையில் ரூ.10 மற்றும் ரூ.20 பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, சோதனை முயற்சியாகத் தலா 100 கோடி எண்ணிக்கையிலான ரூ.10 மற்றும் ரூ.20 பாலிமர் நோட்டுகளை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், அவற்றை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. காகித நோட்டுகளுடன் ஒப்பிடும்போது பாலிமர் நோட்டுகள் 2 முதல் 6 மடங்கு வரை நீண்ட காலம் உழைக்கக்கூடியவை. இதனால் புதிய நோட்டுகளை அச்சிடுதல், சேதமடைந்த நோட்டுகளை மாற்றுதல் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அரசுக்கு கணிசமாகக் குறையும்.

மேலும், பாலிமர் நோட்டுகள் எளிதில் சேதமடையாது என்பதுடன், அவற்றில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க முடியும் என்பதால் போலி நோட்டுகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இது பெரிதும் உதவும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலிமர் நோட்டுகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *