தமிழ்நாட்டில்அதிகரிக்கும் பெண்கள் நடத்தும் ‘ஸ்டார்ட் அப்’கள்!

New Project (45)

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் ஊக்குவிப்பு காரணமாக, வேலையைத் தேடும் நிலையைத் தாண்டிப் புதிய தொழில்களைத் தொடங்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஸ்டார்ட் அப் டி.என்.’ (StartupTN) நிறுவனத்தின் வழிகாட்டுதலால் தற்போது மாநிலம் முழுவதும் 15,037 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுச் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்களை விடப் பெண்கள் 107 நிறுவனங்களைக் கூடுதலாக நடத்தி, தொழில் துறையில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். தற்போது பெண்கள் தலைமையில் 7,572 நிறுவனங்களும், ஆண்கள் தலைமையில் 7,465 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 5,134 நிறுவனங்களுடன் தலைநகர் சென்னை மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துப் கெத்து காட்டி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை 2,011 நிறுவனங்களுடனும், காஞ்சிபுரம் 1,318 நிறுவனங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. திருவள்ளூர் (916), செங்கல்பட்டு (815), மதுரை (497), திருச்சி (446), சேலம் (403), ஈரோடு (350) மற்றும் கிருஷ்ணகிரி (239) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த டாப் 10 இடங்களில் வரிசைகட்டிப் புதுமைப் பெண்களின் தொழில் புரட்சியைப் பறைசாற்றி வருகின்றன.

இதனிடையே, வளர்ந்து வரும் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.-யின் வர்த்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி சார்பில் சிறப்புப் பயிற்சி வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் தொடங்குவது மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆகஸ்ட் 10 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்துகொண்டு சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு, தொழில் தொடங்குவதற்காக 4 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கூகுள் படிவம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *