இனி கதைகளின் வடிவில் கணிதம்: பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்!

தமிழகப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கல்வியை மேலும் சுவாரசியமாக மாற்றவும் பள்ளி கல்வித்துறை சார்பாக பல்வேறு புதிய மாற்றங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், பள்ளிப் பாடநூல்களில் கொண்டுவரப்பட உள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து முக்கிய அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சரின் உரையின்படி, இனிவரும் காலங்களில் பள்ளி பாடப்புத்தகங்கள் அதிக அளவிலான வண்ணப் படங்களுடன் (Colourful Illustrations) மிகவும் கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, பல மாணவர்களுக்குக் கடினமான பாடமாகக் கருதப்படும் கணிதத்தை, இனி சுமையான பாடமாக இல்லாமல் சுவையான கதைகளின் வடிவில் (Maths Through Stories) எளிமையாகக் கற்றுத்தரப் புதிய பாடத்திட்டத்தில் வழிகோலப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கணித பயம் முற்றிலும் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்கால டிஜிட்டல் உலகின் அதிவேக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. பாடங்களை மனப்பாடம் செய்யும் முறையை மாற்றி, செயல்முறை விளக்கம் மற்றும் சுவாரசியமான கதைகள் மூலமாக மாணவர்களின் சிந்திக்கும் திறனை உயர்த்தும் நோக்கில் இந்த புதிய பாடத்திட்டம் அமையவுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக்காட்டினார்.
