ஜஸ்ட் ரூ.150 போதும்! கொடைக்கானலை அழகா சுற்றிப்பார்க்கலாம்…ஒரு இடம் கூட மிஸ் ஆகாது!
மலைகளின் இளவரசியான கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி உயரத்தில் இயற்கையின் எழில் கொஞ்சும் இடமாகத் திகழ்கிறது. ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவும் இந்தப் பகுதிக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அழகிய ஏரிகள், அடர்ந்த பைன் காடுகள், பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்குகள் எனப் பல சிறப்புகளைக் கொண்ட கொடைக்கானலில், தற்போது கோடைக்காலம் மற்றும் விடுமுறை சீசன் காரணமாகக் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டும், டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களுக்கான அதிகப்படியான செலவைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், சுற்றுலாப் பயணிகள் வெறும் 150 ரூபாய் கட்டணத்தில் கொடைக்கானலின் மிக முக்கியமான 11 இடங்களை எவ்வித சிரமமுமின்றிச் சுற்றிப் பார்க்க முடியும். இது குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா வருபவர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
இந்தச் சுற்றுலாப் பயணம் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் அரசுப் பேருந்து, அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், உலகப் புகழ்பெற்ற குணா குகை, பிரம்மாண்டமான தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு மற்றும் கால்ப் மைதானம் ஆகிய இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும். மேலும், பாம்பார் ஆறு காட்சி, 500 ஆண்டுகள் பழமையான மரம், கோக்கர்ஸ் வாக் மற்றும் பிரையண்ட் பூங்கா என வரிசையாக அனைத்து இடங்களையும் காண்பித்துவிட்டு, இறுதியில் கொடைக்கானல் ஏரி பகுதியில் பயணிகளை இறக்கிவிடும்.
இந்தத் திட்டத்தில் பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சொந்த வாகனம் இல்லாமல் வருபவர்களுக்கு இந்த அரசுப் பேருந்துச் சேவை மிகவும் பாதுகாப்பானதாகவும், சிக்கனமானதாகவும் இருக்கும். எனவே, இந்த முறை நீங்கள் கொடைக்கானல் சென்றால், போக்குவரத்து அலைச்சலைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த அரசுப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தி மலைகளின் இளவரசியை முழுமையாக ரசிக்கலாம்.
