ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ‘உக்கிரம்’ நிறைந்த திருவிழா – 1,000 கிலோ கறியுடன் தடபுடலான விருந்து!
மதுரை என்றாலே விழாக்கோலத்திற்கும், பாரம்பரியமான வழிபாட்டு முறைகளுக்கும் பெயர் பெற்றது. அந்த வகையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பானடி கிராமத்தில், ஒரு வினோதமான கறி விருந்து திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இக்கிராமத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் ‘கரும்பாறை முத்தையா’ சுவாமிக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக இந்தத் திருவிழாவை நடத்துகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றுத் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமே இதற்காகத் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான கறி விருந்துதான். வேலைவாய்ப்பு, குழந்தை வரம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டிக்கொண்ட பக்தர்கள், நேர்ந்து விடப்பட்ட கருப்பு நிற வெள்ளாடுகளைச் சாமிக் காணிக்கையாக வழங்கினர். இந்த ஆண்டு சுமார் 60 கிடாய்கள் வெட்டப்பட்டு, 1,000 கிலோ கறி மற்றும் 2,000 கிலோ அரிசியைப் பயன்படுத்தி மிகப்பிரம்மாண்டமான முறையில் கறி விருந்து தயார் செய்யப்பட்டது. இந்தக் கறி சோறு படையலிடப்பட்டு, பின்னர் அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்குப் பரிமாறப்பட்டது.
பெண்களுக்கு ஏன் அனுமதி இல்லை? இந்தத் திருவிழாவில் ஒரு முக்கியக் கட்டுப்பாடு என்னவென்றால், இதில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சுவாமிக்கு ஆடுகளைப் பலியிட்டுப் படையலிடும்போது, கருப்பசாமி மிகவும் ‘உக்கிரம்’ நிறைந்த நிலையில் இருப்பார் என்பது இப்பகுதி மக்களின் ஆழமான நம்பிக்கை. அதன் காரணமாகவே, பாதுகாப்பு கருதி பெண்களுக்கு இந்த வழிபாட்டிலும், கறி விருந்திலும் அனுமதி வழங்கப்படுவதில்லை. சமைப்பதில் தொடங்கி, பரிமாறுவது மற்றும் சாப்பிடுவது வரை அனைத்துப் பணிகளையும் ஆண்களே முன்னின்று நடத்துகின்றனர். மதுரையின் இந்தத் தொன்மையான வழிபாடு, இன்றும் மாறாத பாரம்பரியத்துடன் தொடர்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
