தமிழ்நாட்டில் மழை, பனிமூட்டத்திற்கு வாய்ப்பு! – வானிலை மையம்!
மழை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மாநிலம் முழுவதும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, நாளை முதல் வரும் டிசம்பர் 21-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்.
பனிமூட்டத்தைத் தொடர்ந்து குளிரின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் 21-ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும்.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
