ராமேஸ்வரம்–மண்டபத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
வங்கக்கடல் வளிமண்டல சுழற்சி காரணமாக 50–65 km வேகத்தில் கடல் காற்று வீசும் நிலையில், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து இன்று மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகக் கரையோரங்களில் கடல் காற்று வேகம் அதிகரித்துள்ளது. மணிக்கு 50–55 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இன்று கடல் காற்று வேகம் மேலும் அதிகரித்து 45–65 கி.மீ வரை வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க அனுமதி சீட்டுகள் இன்று வழங்கப்படவில்லை. இதனால் நாட்டுப்புற மற்றும் விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரையோரத்தில் தங்கியுள்ளனர். பாம்பன் பகுதியிலும் பலத்த காற்று காரணமாக மீன்பிடிப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
