சென்னையில் இன்று ‘சூரியன் ரி-என்ட்ரி’ மழை ஓய்ந்து மக்கள் நிம்மதி
டிட்வா புயல் தாக்கத்தால் நீடித்து வந்த கனமழை ஓய, இன்று வெயில் தலைகாட்டியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை, 30-ந்தேதியிலிருந்து வட தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை பெய்ததால், பல பகுதிகளில் தாழ்வான இடங்கள் நீர் il மூழ்கின. கருமேகங்கள் சூழ, பகலிலும் இரவாக தோன்றும் அளவுக்கு வானம் இருண்டது. பலர் வீடுகளில் முடங்கிய நிலையில், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால், நகரத்தில் விட்டு விட்டு கனமழை பதிவானது. 7 மணி வரை தூறல் மழை தொடர்ந்திருந்தபோதிலும், பள்ளி வளாகங்களில் நீர் தேங்கியதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் வெளிப்பட்டு மக்கள் நிம்மதியடைந்தனர்.வெளியே சென்று அன்றாட வேலைகளை செய்யவும் பொதுமக்கள் முனைந்தனர்.
மழை காரணமாக மூடப்பட்டிருந்த சாலையோர கடைகள், காய்கறி–பழ விற்பனையாளர்கள் இன்று மீண்டும் வியாபாரம் தொடங்கினர். மழை–குளிரில் சோர்ந்திருந்த சென்னைவாசிகளுக்கு தற்காலிகமாகத் தோன்றிய வெயில் சிறிய மகிழ்ச்சி மற்றும் ஓய்வை வழங்கியுள்ளது.
