தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு?
தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று (10-06-2025) தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (11-06-2025) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
12-06-2025 அன்று, வட தமிழகத்தில் பல இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை தொடரும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸையும் ஒட்டி இருக்கும். நாளை (11-06-2025) மழை தொடரும், வெப்பநிலை 37-38° செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26-27° செல்சியஸாகவும் இருக்கும்.
மழை காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனமழை பெய்யும் பகுதிகளில் பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
