துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள்… அசைந்து கொடுப்பாரா ஆளுநர் ரவி?

Governor Ravi - Madras University

மிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி, பல்வேறு நிபந்தனைகளை விதித்து முட்டுக்கட்டைப் போடுவதாக தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் அனலைக் கிளப்பி உள்ளது. இந்த நிலையில், அப்பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பல கேமராக்கள் செயல்படாமல் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாக செயல்பாடுகளில் காணப்படும் சுணக்கமே காரணம் என்றும், பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் இல்லாதாதே இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது, சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதனால், இப்பல்கலைக்கழகங்களிலும் நிர்வாக பணிகள் முடங்கி உள்ளதாகவும், பட்டமளிப்பு விழாக்களையும் உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் கல்வியாளர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். மேலும், பட்டப் படிப்புக்கான சான்றிதழ்களில் அதிகாரிகளே கையெழுத்துடுவது பட்டம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பைக் கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாமதம் ஏன்?

காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் தற்போது தடையாக இருக்கும் முக்கிய பிரச்னை என்னவென்றால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்துவது தான். ஆனால், இதனை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. வழக்கமாக துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநர், தமிழ்நாடு அரசு, பல்கலை. ஆட்சி மன்றக் குழு பிரதிநிதி என மூவர் இடம் பெறுவர். தேடுதல் குழுவில் நான்காவதாக யுஜிசி பிரதிநிதியை ஆளுநர் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

‘யுஜிசி விதிகள் கட்டாயம் அல்ல’

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி, ” தற்போதுள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் யுஜிசி பிரதிநிதியைத் தேடல் குழுக்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்கு இடமில்லை.

தேடல் குழுக்களில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது துணைவேந்தர் நியமனத்தில் பாரபட்சத்தையும் அரசியல் குறுக்கீட்டையும் கட்டுப்படுத்தும் என்பதால் அது வரவேற்கத் தக்கதுதான். என்றாலும், அதை யாரும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அது மட்டுமின்றி, கல்வி தொடர்பானவை நீங்கலாக யுஜிசி விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல.துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான பிரிவை பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் இடம்பெறச் செய்வதே இதற்குத் தீர்வு.

அசைந்து கொடுப்பாரா ஆளுநர்?

அதுவரை, தமிழக ஆளுநர் தற்போதைய நடைமுறைகள், மரபுகளை ஏற்பதற்கு இசைய வேண்டும். துணைவேந்தர்கள் நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும். அதுவே லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைத் துடைக்கும். தமிழகத்தின் உயர் கல்வியின் ஒட்டுமொத்த நலன் கருதி, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரும் இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்கள் மோதல் போக்கினைக் கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

பாலகுருசாமி மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை உண்டு. நீட் தேர்வு உட்பட கல்வி தொடர்பான பல பிரச்னைகளில் அவர் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அவரே தற்போது ” கல்வி தொடர்பானவை தவிர்த்து, பிற யுஜிசி விதிகள், அதாவது துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல” கூறி இருப்பது கவனத்துக்குரியதாக கருதப்படுகிறது.

பாலகுருசாமி

இதை கருத்தில்கொண்டு ஆளுநரின் போக்கில் மாற்றம் ஏற்படுமா என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Earn money recurring online by referring others — completely free and simple to use on websites and social media. Just a moment.... heavy equipment transport hampden ma.