காளைகளுக்கு ஆபத்து இருக்கக்கூடாது! – ஜல்லிக்கட்டு நடத்தத் தமிழ்நாடு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை, வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டிப் பாதுகாப்பாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெறும். இதைக் கருத்தில் கொண்டு, போட்டிகளை ஒருங்கிணைக்கும் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் விழாக்குழுவினருக்கு அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்குச் சிறிதும் பாதிப்பு ஏற்படாத வகையில் மைதானம் மற்றும் வாடிவாசல் பகுதிகளில் உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.காளைகளைத் துன்புறுத்துவதோ, அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழக்கமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வடமாடு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட்ட பிறகே போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
