ராஜினாமாவுக்குத் தயாராகும் செந்தில் பாலாஜி? – சட்டப்பேரவையில் நடந்த திடீர் மாற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எதிர்பாராத திருப்பமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவருக்குப் பதிலாக சட்டத்துறை அமைச்சர் ஆர். ரகுபதி மசோதாக்களைத் தாக்கல் செய்தார். இந்த திடீர் மாற்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என வெளியான தகவல்களை உறுதிபடுத்தி உள்ளது.
செந்தில் பாலாஜி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். 2023 ஜூன் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 2011-2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். 2024 பிப்ரவரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், 2024 செப்டம்பர் 26-ல் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இரண்டு நாட்களில் மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தற்போது, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. “செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவை மீறியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?” எனக் கூறி, ஏப்ரல் 28-க்குள் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால், அவர் மீண்டும் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை மாற்றம்
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. 2023-ல் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது, அவர் கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் முறையே நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ். முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன.
ஆனால், இந்த முறை, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதாலும் ஆயத்தீர்வைத் துறையின் முக்கியத்துவம் குறைந்து வருவதாலும், இந்த ஏற்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை. மேலும், நிதி மற்றும் தொல்லியல் துறைகளால் பணிச் சுமையை எதிர்கொண்டுள்ள தென்னரசு, கூடுதல் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத் துறை

கோட்டை வட்டாரத் தகவல்களின்படி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம். ஆயத்தீர்வைத் துறை, திமுகவின் திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் ஐ. பெரியசாமிக்கு கூடுதல் பொறுப்பாகவோ அல்லது தற்போது தகவல் துறையை கவனிக்கும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.பி. சாமிநாதனுக்கோ வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பதவி இழக்கும் பொன்முடி
மேலும், வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி, தனது சர்ச்சை பேச்சு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வதால், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் எனக்கூறப்படுவதால், பொன்முடி கவனித்து வந்த வனத்துறை சாமிநாதனுக்கு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
