எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது… தமிழ் இலக்கிய உலகுக்கு இன்னொரு பெருமை!

S Ramakrishnan 1200

எஸ்.ரா என அழைக்கப்படும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

வருகிற மே 1 ஆம் தேதி, கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

2018 ல் சாகித்திய அகாதமி விருது

இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், பிரெஞ்சு, ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது ‘சஞ்சாரம்’ நாவலுக்காக 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். மதுரை, கோவில்பட்டி, சாத்தூர் என கரிசல் மண் சூழ்ந்த பூமியில் வாழும் நாதஸ்வர கலைஞர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் அந்த நாவலில் உணர்வுபூர்வமாக விவரித்திருப்பார். மங்கல ஒலி எழுப்பும் அவர்களின் வாழ்க்கை எத்தனை துயரங்களும், துன்பங்களும் சூழ்ந்தது என்பதை யாரும் அறிந்திருக்க முடியாது. இந்த நாவல் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்களை ஆராய்ந்து இதுவரை 21 பேர் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நான்கு பல்கலைகழகங்களிலும் 12 கல்லூரிகளிலும் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இலக்கிய பங்களிப்புகள்

1966 ல் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய படைப்பாளியாக விளங்குகிறார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகள் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புகள் என பல தளங்களில் அவரது பங்களிப்பு பரவியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள அவர், மனித அனுபவங்கள், பண்பாடு மற்றும் நவீனத்துவத்தை ஆழமாக ஆராயும் படைப்புகளால் புகழ்பெற்றவர்.

அவரது முக்கிய நாவல்களில் ஒன்றான ‘உறுபசி’, வேலையில்லாத ஒரு இளம் தமிழ் பட்டதாரியின் உணர்வு மற்றும் உளவியல் போராட்டங்களை சித்தரிக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களின் சமூக-பொருளாதார சவால்களை பிரதிபலிக்கும் இந்நாவல், தனிப்பட்ட கதைகளை சமூக விமர்சனத்துடன் இணைக்கும் அவரது திறனை வெளிப்படுத்துகிறது. மற்றொரு நாவலான ‘யமம்’, மனித ஒழுக்கம் மற்றும் உயிர்வாழ்தலின் சிக்கல்களை ஆராயும் ஒரு பரபரப்பான புனைவு. இதன் கதைசொல்லல் ஆழம் வாசகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.

கதை சொல்லலில் நவீன பாணி

ராமகிருஷ்ணனின் சிறுகதைகள், பாரம்பரிய தமிழ் கதைப்பாங்கிலிருந்து விலகி நவீன பாணியால் தனித்து நிற்கின்றன. ‘கதவிலாசம்’ மற்றும் ‘நெடும் குருதி’ போன்ற தொகுப்புகள், அன்றாட வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் நுட்பமான நகைமுரண்களை சுருக்கமாகவும் தாக்கமாகவும் விவரிக்கின்றன. அவரது சிறுகதைகளில் திரைப்படத் தன்மை தென்படுவது, ‘பாபா’, ‘சண்டக்கோழி’ போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு அவர் எழுதிய திரைக்கதை மற்றும் வசனங்களிலும் பிரதிபலிக்கிறது.

ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் பரந்த வாசகர் பரப்பை ஈர்த்துள்ளன. ஆனந்த விகடனில் வெளியான அவரது ‘துணை எழுத்து’ தொகுப்பு நல்ல வரவேற்பை பெற்று, புதிய பார்வையாளர்களை உருவாக்கியது. தனிப்பட்ட சிந்தனைகளையும் பண்பாட்டு விமர்சனங்களையும் கலந்து வழங்கும் இந்நூல் தனித்துவமானது. ‘தேசாந்திரி’ என்ற பயணக் கட்டுரைத் தொகுப்பில், இந்தியாவின் பல பகுதிகளுக்கான அவரது பயணங்களை வரலாறு, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுடன் சித்தரித்திருந்தார்.

புத்தகங்களுக்கு அப்பால், தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கதைசொல்லல் முகாம்களை நடத்தி, சங்க கால பாணர்கள் மற்றும் கூத்தர்களின் வாய்மொழி பாரம்பரியத்தை மீட்டெடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Earn money recurring online by referring others — completely free and simple to use on websites and social media. Just a moment.... power only wyoming.