இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஜூலை 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 17-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அரியானா மாநிலத்தின் ஜிந்த் மற்றும் சோனிபட் நகரங்களுக்கு இடையே இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
சென்னையின் பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த ரயில், நாட்டின் பசுமை எரிசக்தி போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. டீசல் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜிந்த் – சோனிபட் இடையிலான இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்குவதன் மூலம், எரிசக்தி சேமிப்புடன் கூடிய அதிநவீன போக்குவரத்து வசதி பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
