” ‘இண்டியா’ கூட்டணி’ யின் எதிர்காலம்…” – ப.சிதம்பரம் பேச்சு உசுப்பேத்தும் உத்தியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா கூட்டணி’யின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

மே 15 அன்று, சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் எழுதிய ‘கன்டெஸ்டிங் டெமாக்ரட்டிக் டெஃபிசிட்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கூட்டணியின் ஒற்றுமை மற்றும் வலிமை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

சிதம்பரம் சொன்னது என்ன?

” ‘இண்டியா கூட்டணி’யின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. கூட்டணி இன்னும் நிலைத்திருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.’இண்டியா கூட்டணி’யை இப்போதும் ஒருங்கிணைக்க முடியும். அதற்கான நேரம் இன்னமும் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையான இயந்திரத்தை எதிர்த்துப் போராடுகிறது. அதனை எல்லா முனைகளில் இருந்தும் எதிர்த்துப் போராடவேண்டும்.

எனது அனுபவத்தில், பாஜக மற்றுமொரு அரசியல் கட்சி இல்லை. அது ஒரு இயந்திரத்துக்கு பின்னால் நிற்கும் இன்னுமொரு இயந்திரம். இரண்டு இயந்திரங்களும் சேர்ந்து இந்தியாவிலுள்ள எல்லா இயந்திரங்களையும் கட்டுப்படுத்துகின்றன.

தேர்தல் ஆணையம் முதல் நாட்டிலுள்ள சிறிய காவல்நிலையம் வரை அவர்களால் (பாஜக) அனைத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது, சிலநேரம் கைப்பற்றவும் முடிகிறது. இந்தியாவின் தேர்தல்களை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் அது இன்னும் தேர்தல் ஜனநாயகமாகவே இருக்கிறது.

இந்தியாவில் தேர்தல்களில் நீங்கள் தலையிட முடியும். அவற்றை நீங்கள் சரி செய்யலாம். ஆனால் நீங்கள் தேர்தல்களில் இருந்து தப்பிக்க முடியாது. தேர்தல்களில் ஆளுங்கட்சி 98 சதவீதம் பெற்று வெற்றி பெற செய்யமுடியாது. அது இந்தியாவில் சாத்தியமில்லை. 2029 மக்களவைத் தேர்தல் முக்கியமானது, அது நம்மை ஒரு முழுமையான ஜனநாயகத்துக்கு திரும்பச் செய்யவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

புத்தக வெளியீட்டு விழாவில்…

அவரது இந்தக் கருத்துகள்,’இண்டியா கூட்டணி’ யின் எதிர்கால நிலை குறித்து பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளன.

இண்டியா கூட்டணியின் இப்போதைய நிலை

இண்டியா கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance), பாஜகவின் தேர்தல் ஆதிக்கத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இதில் உள்ளன. ஆனால், தொகுதி பங்கீடு, பிராந்திய கட்சிகளின் மோதல், தலைமை குறித்த தெளிவின்மை ஆகியவை கூட்டணியை பலவீனப்படுத்தியுள்ளன. சிதம்பரத்தின் பேச்சில் வெளிப்பட்ட “பிளவு” மற்றும் “பிரகாசமற்ற எதிர்காலம்” போன்ற வார்த்தைகள், கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாததை வெளிப்படுத்துகின்றன.

சாதகமாக்கிய பாஜக

இந்த நிலையில், சிதம்பரத்தின் கருத்துகளை பாஜக உடனே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, எக்ஸ் தளத்தில், “ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் கூட காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை என்கிறார்கள். சிதம்பரம், கூட்டணியின் உண்மையை ஒப்புக்கொள்கிறார்,” என்று பதிவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில், இந்தக் கருத்து பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளை “திசை தெரியாதவர்கள்” என்று சித்தரிக்க உதவியாக இருக்கும்.

உசுப்பேத்தும் உத்தியா?

அதே சமயம் சில அரசியல் பார்வையாளர்கள், சிதம்பரத்தின் பேச்சு ஒரு உசுப்பேத்தும் உத்தியாக இருக்கலாம் என்கின்றனர். கூட்டணியில் உள்ள மந்தநிலையைப் போக்கி முடுக்கிவிடுவதற்காகவும், பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்திலும், அவர் இப்படி வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொகுதி பங்கீட்டு சிக்கல்களுக்குப் பிறகு, ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இண்டியா கூட்டணியில் தற்போதைய மிகப்பெரிய பிரச்னை, தலைமை குறித்த தெளிவின்மை தான். இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் மையப் பங்கு வகிக்குமா, அல்லது மம்தா பானர்ஜி போன்ற பிராந்திய தலைவர்களை ஏற்குமா? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. மேலும், கூட்டணி கட்சிகளின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளில் ஒருமித்த கருத்து இல்லை. எல்லாக் கட்சிகளும் பாஜகவின் மையப்படுத்தப்பட்ட ஆட்சி மற்றும் ஜனநாயக மீறல்களை எதிர்த்தாலும், அவர்களின் தனிப்பட்ட இலக்குகள் மாறுபடுகின்றன.

மு.க. ஸ்டாலின் சொல்வது என்ன?

மு.க. ஸ்டாலின் இது குறித்து கூறுகையில், “இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதாக ப.சிதம்பரம் கூறியிருப்பது அவருடைய கருத்து மட்டுமே. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாடு மீது தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. 2026 மட்டுமல்ல 2031, 2036 – லும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டில் தொடரும் ” என்கிறார்.

எதிர்கால தேவை

அதேபோன்று சிதம்பரமும் நம்பிக்கை இழக்கவில்லை. கூட்டணியை மீண்டும் உருவாக்க முடியும் என்று அவர் கூறி உள்ளார். ஆனால், அதற்கு வரும் நாட்களில் சில முக்கிய நடவடிக்கைகள் தேவை. மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த உத்தி, தெளிவான தலைமை மற்றும் செய்தி, நியாயமான தொகுதி பங்கீடு,பணவீக்கம், வேலையின்மை, அரசியலமைப்பு பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் ஒருமித்த குரல் போன்றவை முக்கியமானதாக தேவைப்படுகிறது. இவை செய்யப்படாவிட்டால், கூட்டணி உண்மையிலேயே பலவீனமடையும்.

மொத்தத்தில் சிதம்பரத்தின் கருத்துகள், இண்டியா கூட்டணியின் தற்போதைய நிலையை மட்டும் சுட்டிக்காட்டவில்லை, அது மாற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இண்டியா கூட்டணி இப்போது ஒரு தெளிவான பாதையை, அதாவது ‘ஒருங்கிணைந்து முன்னேறுவதா, அல்லது பிளவுகளால் தோல்வியடைவதா?’ ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டியா கூட்டணி’யின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Aliansi maritim indonesia dukung penyesuaian tarif bongkar muat pelabuhan peti kemas chanel nusantara. Tn college football player dies overnight. Global site navigationlocal editionspay attention : leave your feedback about legit.