தமிழகத்தில் கனமழை வாய்ப்பு — வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
மேலும், வடதமிழகம்–புதுவை கடற்கரை பகுதிகளில் நேற்று உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இன்று காலை 8.30 மணியளவில் அது மேலும் பலவீனமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வானிலை மாறுபாடு தொடரும் நிலையில், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை, தமிழகத்தில் சில இடங்களில், புதுவை–காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெறலாம். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 முதல் 10 வரை, தமிழகத்தில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானிலை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29°c, குறைந்தபட்சம் 24°c வரை பதிவு செய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை வானமும் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29°c, குறைந்தபட்ச வெப்பநிலை 24-25°c வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் கேரளக் கடலோரத்தை அண்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 35–45 கி.மீ வேகத்தில், இடையிடையே 55 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
