ஈரோடு (கி) இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு … பிப். 8 ல் வாக்கு எண்ணிக்கை!

ரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிட்ட நிலையில் மொத்தம் 46 வேட்பாளர்கள் களம் கண்டனர். இருப்பினும் திமுக-வுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான இருமுனை போட்டியே தேர்தல் பிரசாரத்தின்போது பெரும் அளவில் வெளிப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இத்தேர்தலில் 1 லட்சத்து 10, 128 ஆண்களும், 1 லட்சத்து 17, 381 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27, 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தன. வாக்காளர்களின் வசதி கருதி சாமியானா பந்தல், மின் விளக்குகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கத் தொடங்கினர். காலை 9 மணி நிலவரப்படி 10.95% ஆக இருந்த வாக்கு சதவீதம், 11 மணி நிலவரப்படி 26.03% ஆக இருந்தது. இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 42.41% வாக்குகள் பதிவான நிலையில், மாலை 3 மணி அளவில் 53.63 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு?

இந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சுமார் 65 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8 ல் வாக்கு எண்ணிக்கை

இதனிடையே வாக்குப் பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வருகிற 8 ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ist eine ordentliche kündigung ohne grund rechtlich möglich ?. Integrative counselling with john graham. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе.