கோவை செம்மொழிப் பூங்காவில் நாளை (டிசம்பர் 11) முதல் அனுமதி
கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான காந்திபுரம் செம்மொழிப் பூங்காவை, நாளை (டிசம்பர் 11) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கனவுத் திட்டமான இது, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் கடந்த நவம்பர் 25-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சுமார் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செண்பகம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, மற்றும் குங்குமம் மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், நீர்வீழ்ச்சியுடன் கூடிய பிரம்மாண்ட நுழைவு வாயில், பசுமை வனம், மற்றும் பல்வேறு வகையான தோட்டங்கள் 38.69 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ளன. இது கோவையின் மிக முக்கியச் சுற்றுலாத் தளமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூங்காவைப் பராமரிக்கும் வகையில், பார்வையாளர்களுக்கு மிதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெரியவர்களுக்கு ரூ.15-ம், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். காலை வேளையில் நடைபயிற்சி (Walking) செய்ய விரும்புவோருக்கு, மாதாந்திரக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்கும் தனிக் கட்டணங்கள் உள்ளன. சாதாரண கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50 செலுத்த வேண்டும். இதுதவிர, குறும்பட படப்பிடிப்பிற்கு ரூ.2,000 எனவும், திரைப்படப் படப்பிடிப்பிற்கு நாளொன்றுக்கு ரூ.25,000 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காவானது வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
