சீனாவில் பரவும் வைரஸ் ஆபத்தானதா..? கண்காணிக்கும் இந்தியா!

HMPV virus

சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல நாடுகளில் பொருளாதார நிலை மோசமடைந்தது.

அதிலிருந்து உலக நாடுகள் ஒருவழியாக மீண்டு வந்துவிட்ட நிலையில், சீனாவில் அவ்வபோது வெடித்துக் கிளம்பும் புதுப்புது வைரஸ் குறித்த தகவல்கள் இதர நாடுகளில் உள்ள மக்களைப் பீதியடையச் செய்கிறது.

அந்த வகையில், தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் தனது நாட்டு மக்களை சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சீனாவை வலியுறுத்தும் WHO

இதனிடையே 2020 ல் ஏற்பட்ட கோவிட் -19 பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வைரஸ் பரவல் மற்றும் அதன் தாக்கம் குறித்த தகவல்களை சீனா பகிர்ந்துகொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பான WHO வலியுறுத்தி உள்ளது.

இதனையடுத்து கோவிட் வைரஸ் குறித்த தகவல்கள் எதையும் தாங்கள் மறைத்ததில்லை என்றும், தற்போது நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

“குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சத்தில் இருக்கும். ஆனாலும், நோய்களின் தீவிரம் குறைவாக உள்ளது. முந்தைய ஆண்டை விட சிறிய அளவிலேயே பரவுகிறது. சீன குடிமக்கள் மற்றும் சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்தில் சீன அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது” என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று நோயாகும். இது காற்றின் மூலமாகவும் தொடுவதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் 2001 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கண்காணிக்கும் இந்தியா

இந்த நிலையில், சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவுவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியாவில் இதுவரை குளிர்கால சுவாச நோய்களில் அசாதாரணமான அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

” பொதுவாக இது குளிர்காலம் என்பதால் இருமல் மற்றும் தும்மலுக்கு தனித்தனியான கைக்குட்டை அல்லது துண்டைப் பயன்படுத்துங்கள். சளி அல்லது காய்ச்சலுக்குத் தேவைப்படும் சாதாரண மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய சூழ்நிலையைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை ” என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... Heavy equipment transport hampden ma.