“உலர்ந்த தமிழன் எங்கே?” – பாரதியார் பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

New Project - 2025-12-11T113901.083

“அச்சம் தவிர்” என்று முழங்கிய மகாகவி பாரதியார், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை மட்டுமல்ல, இயற்கையின் ருத்ர தாண்டவத்தையும் கண்டு அஞ்சாதவர். புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில், 1916-ம் ஆண்டு தாக்கிய ஒரு பெரும் புயல், பாரதியின் கவித்துவத்தையும், பத்திரிகை தர்மத்தையும், சமூக விமர்சனத்தையும் ஒரே நேரத்தில் வெளிக்கொண்டு வந்தது.

1916-ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 8-ம் தேதி (நவம்பர் 16). புதுச்சேரியை ஒரு பெரும் சூறாவளி தாக்கியது. ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவில் வசித்த பாரதி, நல்லவேளையாக அந்த இரவுதான் எதிர்வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அவர் காலி செய்த பழைய வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

அந்த நள்ளிரவில் இடி, மின்னல், மழையின் கோரத்தாண்டவத்தைக் கண்டு மனைவி செல்லம்மாள் பயந்தபோது, பாரதிக்கு அது கவிதையாகப் பொங்கியது.”காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே” என்று மனைவி கேட்பதாகவும், அதற்குப் பாரதி பராசக்தியின் துணையை நாடுவது போலவும் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

சாதாரண மனிதர்களுக்கு மழை அச்சத்தைத் தரும். ஆனால், பாரதிக்கு அது இயற்கையின் நடனம். “திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தீம்தரிகிட” என்று மழையின் தாளத்திற்கேற்ப வார்த்தைகளை அடுக்கி, அதை ‘ஊழிக்கூத்து’ என்று வர்ணித்தார். அதே சமயம், இயற்கையோடு குழந்தையைப்போலக் கொஞ்சிப் பேசும் வழக்கம் அவரிடம் இருந்தது. “காற்றே வா… மெதுவாக வா… ஜன்னல் கதவை உடைத்து விடாதே” என்று காற்றோடு அவர் நடத்திய உரையாடல், வசன கவிதையின் உச்சம்.

கவிஞராக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும் பாரதி செயல்பட்டார். அந்தப் புயல் ஏற்படுத்திய சேதங்களை ‘சுதேசமித்திரன்’ இதழில் மிகத் துல்லியமாகப் பதிவு செய்தார். “ஈஸ்வரன் கோவில் சிகரம் விழுந்துவிட்டது, காக்கைகள் செத்துக் கிடக்கின்றன” என்று அவர் எழுதிய வரிகள், அந்தப் புயலின் கோரத்தை கண்முன் நிறுத்தின.

இந்த மழையின் ஈரம் பாரதிக்கு ஒரு சமூக விமர்சனத்தை நினைூட்டியது. ஊரே வெள்ளக்காடாக மாறியபோது, தமிழர்களின் நிலையைத் தனது பாணியில் கிண்டல் செய்தார். “மழை பெய்கிறது… தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள்… ஈரத்திலே படுக்கிறார்கள்… உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்!” என்று அவர் கூறியது வெறும் உடலின் ஈரத்தை மட்டுமல்ல.

அக்காலத் தமிழர்களிடம் இருந்த அறியாமை, சோம்பல், மற்றும் அடிமைத்தனம் எனும் ‘ஈரத்தை’ சுட்டிக்காட்டி, வீரம் எனும் நெருப்பு பற்றிக்கொள்ளாதா என்ற ஏக்கத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகள் அவை.

டிசம்பர் 11, 1882-ல் எட்டயபுரத்தில் பிறந்த அந்தத் தீப்பொறி, தமிழர்களின் அறியாமை ஈரத்தை உலர்த்த வந்த சூரியன். இயற்கையை ரசித்த, இறைவனை வணங்கிய, அதே சமயம் சமூகத்தைச் சாடிய பாரதியின் சிந்தனைகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

茶,这款性价比最高. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Silicon valley shake up : a look at the latest company innovations » tech news today.