1000 காளைகள், 1698 காளையர்கள்… களைகட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

alankalallur jallikattu

மிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டமான பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டுப் போட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை மற்றும் அதனைத் தொடர்ந்த மாட்டுப்பொங்கல் பண்டிகையுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியும் களைகட்டி காணப்பட்டது.

அந்த வகையில், தமிழகத்தில் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்றும், பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டி நேற்றும் நடைபெற்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி ( 23) என்பவருக்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் கன்றுடன் கூடிய கறவை பசு பரிசாக வழங்கப்பட்டன. இந்த போட்டியில் மலையாண்டி என்பவரது காளை முதல் பரிசுக்கு தேர்வு பெற்றது. இந்த காளை சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு

இதனை தொடர்ந்து, நேற்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1,100 காளைகள் பங்கேற்றன. 910 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச்சுற்று நடந்து கொண்டிருந்தபோது, மாலை 5.45 மணி அளவில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி அத்துடன் நிறுத்தப்பட்டது. சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த விஜய தங்கபாண்டியன் என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டது. அந்த காளைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 14 காளைகளை பிடித்து, அதிக காளைகள் அடக்கிய நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசுக்கான கார் வழங்கப்பட்டது.

இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இப்போட்டிக்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மொத்தம் 5,786 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டு போட்டியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமான காளைகள் உட்பட சுமார் 1,000 காளைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1,698 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

பல சுற்றுகளாக நடைபெறும் இந்த நிகழ்வைக் காண அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடியுள்ளனர். மதுரை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் முதலில் ஐந்து கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டி தொடங்கியது. கோயில் காளைகள் என்பதால் அவற்றை யாரும் பிடிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறப்பாகச் செயல்படும் காளைகளுக்கு கார்கள் உட்பட சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

குறிப்பாக, நடிகர் சூரியின் காளை இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்கிறது. மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் காளைகளும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.

போட்டியைப் பாதுகாப்பாக நடத்துவதை உறுதி செய்வதற்காக, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காளைகள் மீது பொடி வீசுவதைத் தடை செய்தல் மற்றும் அரங்கிற்குள் நுழையும் போது மக்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். மேலும்வ் மாடுபிடி வீரர்கள் யாரும் மது அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

乌龙茶. ip cam 解決方案. Top 10 emerging technologies to master in 2025 : future proof your career !.