AI தொழில்நுட்பம்: அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகும் தமிழ்!

AI

மூத்தவர்கள் பேச்சை மதிக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அந்த மூத்தவர்கள் இந்தக் காலத்திற்கேற்றவாறு அப்டேட் ஆகி இருக்க வேண்டுமே.. இல்லையானால் அவர்கள் அவுட்டேட் ஆகி, ‘பூமர் அங்கிள்’ எனக் கேலியாக அழைக்கப்படுவார்கள்.

தமிழ் மொழியை நாம் மிகவும் தொன்மையான மொழி என்றும் மூத்த மொழி என்றும் சொல்கிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே எழுத்துகள் இருந்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியம் இருந்தது என்று நாம் பெருமைப்படுகிறோம். ஒரு மொழி பழமையானதாக இருந்தால் மட்டும் அதற்குப் பெருமை இல்லை. எப்போதும் இளமையாகவும் இருக்க வேண்டும். அதாவது காலத்திற்கேற்ற மாதிரி அப்டேட் ஆக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மொழிதான் தமிழ்.

தமிழ் தோன்றிய காலத்தில் எத்தனையோ மொழிகள் தோன்றி இருக்கும். அவை அத்தனையும் இப்போதுவரையில் வழக்கத்தில் புழக்கத்தில் இல்லை. ஆனால் தமிழ், இன்றைய அறிவியல் யுகத்திற்கும் பொருத்தமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழ்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்றார் போலத் தமிழ் மொழியை, அறிஞர்களும் இலக்கியவாதிகளும் வளர்த்து வந்திருக்கின்றனர். அறிவியலுக்கு ஏற்றார் போல், அது தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை தமிழ்நாடு நீண்ட நாட்களுக்கு முன்பே உணர்ந்து விட்டது.

இணையமும் மென்பொருட்களும் வந்த காலத்தில், தமிழை அங்கேயும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சிகள் நடந்து, அவை வெற்றியும் பெற்றன. 1999ல் தமிழ் இணையம்99 என்ற மாநாட்டை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி நடத்தினார்.

அந்த மாநாட்டின் விளைவாக தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கப்பட்டது. அந்தக் கல்விக் கழகம் இணைய வழியில் உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறது. பழைய தமிழ் நூல்களையும், இதழ்களையும், அரிய ஆவணங்களையும் இன்றைய தலைமுறை எளிதாகப் படிக்கும் விதத்தில் மின் உருவாக்கம் செய்து வைத்திருக்கிறது (https://www.kanitamil.in என்ற இணையதளத்தில் அவற்றை நாம் காணலாம்) . அந்த மாநாட்டின் போதுதான் தமிழ் விசைப்பலகை 99 வடிவமைக்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழில் மென்பொருட்களை உருவாக்கவும் அது உதவி செய்து வருகிறது.

இப்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதைத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. Natural Language Processing Tools (NLPT),இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்ற தொழில் நுட்பங்களைத் தமிழில் உருவாக்க வேண்டியிருக்கிறது.

இதற்காகத்தான் தமிழ்நாடு அரசு, கடந்த பட்ஜெட்டில் ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும் என்று அறிவித்தது. அந்த மாநாடு அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது. அந்த மாநாடு, தமிழை அறிவியலின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. தமிழுக்கு வயதாகிக் கொண்டே போவதில்லை. குறைந்து கொண்டே வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Earn money recurring online by referring others — completely free and simple to use on websites and social media. Just a moment.... Pontoon boat transport.